Tuesday, December 15, 2009

எழுத்தாளர் திலீப் குமார்

சந்திப்பு தொடங்குவதற்கு 20 நிமிடங்கள் இருக்கும் போதே கேணிக்குச் சென்றுவிட்டேன். யாருமே இல்லாததால் வற்றிய கிணறினை எட்டிப் பார்ப்பது போல் இருந்தது. ஞானியின் குரல் மட்டுமே உள்ளறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. வெளியில் செல்ல வாசலுக்கு வந்தேன், பாஸ்கர் சக்தி அவருடைய நண்பருடன் நின்றுகொண்டிருந்தார்.

அருகில் சென்று மிரச்சியுடன் அவரைப் பார்த்தேன். "ஞானி வந்துவிட்டாரா?" என்று கேட்டார்.

"அவருடைய குரல் உள்ளறையில் கேட்டது. ஆனால்...மற்றவர்கள்....?" என்றேன்.

"15 நிமிடங்கள் இருக்கிறதே... மக்கள் வந்துவிடுவார்கள்..." என்று சொல்லிவிட்டு அவரும் எங்கோ சென்றுவிட்டார்.

மீண்டும் தனியாளாக மிரட்சியுடன் நின்றுகொண்டிருந்தேன். சிவராமன் (பைத்தியக்காரன்) வந்து தேநீர் அருந்திவிட்டு வரலாமா? என்று சுத்தத் தமிழில் கேட்டார். பலூன் விற்பவனின் பின்னால் குழந்தை செல்வது போல சிவராமனுடன் சென்றுகொண்டிருந்தேன். தமிழின் சிறந்த புத்தகங்களைப் பற்றி அந்த நேரத்தில் பேச முடிந்தது. தேநீர் அருந்திவிட்டு கேணிக்குத் திரும்பிய போது 10 நபர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் நானும் சென்று அமர்ந்துகொண்டேன். சினிமாவில் எடிட்டிங் துறையில் பணியாற்றும் இருவரும், தரமணி ஃபிலிம் இன்ஸ்ட்யூடில் பயிலும் இருவரும் எனதருகில் அமர்ந்திருந்தனர்.

கூட்டம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருந்த போது இரண்டாம் குழந்தைப் பருவத்திலிருக்கும் 'அஞ்சளா' அருகில் வந்தமர்ந்தார். என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு அவரைப் பற்றி விசாரித்தேன். சிரித்தார்....

நீங்கள் என்ன பதிவு எழுதுகிறீர்கள்? என்று கேட்டேன்.

"Me... Blog...No..." என்றார்.

துருவி விசாரித்ததில், அவர் டெல்லியில் வாழ்ந்தவர் என்பதும், சாகித்ய அகாடமிக்காக பெங்காலி மற்றும் ஹிந்தி படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் என்பதும் தெரியவந்தது. (உரையாடலின் போது இந்திரா பார்த்த சாரதியின் மாணவி என்றும், பிரபல எழுத்தாளரின் வகுப்புத் தோழி என்றும் கூறினார்.)

) 0 (

"நானும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்து கேணி சந்திப்பை ஆரம்பிக்கும் போது, அதிகமாக 30 நபர்கள் வருவார்கள் என்றுதான் நினைத்திருந்தோம். எஸ்.ரா -பங்கு பெற்ற முதல் சந்திப்பில் 150 பேரும், விடாத மழைக்கு இடையிலும் அசோகமித்திரன் பங்கு பெற்ற சந்திப்பில் 90 பேரும் பங்கு பெற்றனர்.ஆகவே இந்தச் சந்திப்பு தான் இலக்கிய சந்திப்பு போல இருக்கிறது. ஆனாலும் 30 நபர்களுக்கு அதிகமாகத் தான் இருக்கிறார்கள்" -என்று ஆரம்பித்தார்

30 வருட கால எழுத்தாள நண்பரான திலீப் குமாரை அறிமுகம் செய்வதற்கு முன்பு "எத்தனை பேர் இவருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

5 பேர் கையை உயர்த்தினார்கள்.

ஒரு சிறுகதையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிய போது, மேலும் 3 பேர் கையை உயர்த்தினார்கள் அதில் நானும் ஒருவன்.

இந்தக் கேள்வியை எதற்கு நான் கேட்கிறேன் என்றால் அவருடைய புத்தகங்கள் இப்போது அச்சில் இல்லை. மீண்டும் அவருடைய புத்தகங்கள் இளம் வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறுகதை, இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிவரும் சீரிய பங்களிப்பையும், வெளிநாட்டிலுள்ள நூல் நிலையங்களுக்கு மிகுந்த சிரமங்களுக்கிடையில் முக்கியமான நவீன இலக்கியங்களை அறிமுகம் செய்து வைப்பதையும் சிலாகித்துப் பேசினார். அமேரிக்கா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களின் தமிழ் த்துறை மாணவர்களுக்கு பகுதி நேர ஆசிரியராக இருந்து நவீன இலக்கியம் பற்றி வகுப்பெடுப்பதாகவும் கூறினார்.

1857 முதல் 2007 வரையிலான சிறந்த சிறுகதைகளை வரிசைப்படுத்தி அதனை வெளியிடுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற உப தகவலையும் வெளியிட்டார். இவர் செய்யும் வேலைகளை மாணவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இலக்கியப் பணி ஆற்றியவர். என்றாலும் இவர் பள்ளிப் படிப்பை தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றபோது பிரம்மிப்பாக இருந்தது.

பாஷா பாரதி, சாரல் விருது போன்ற பல முக்கியமான விருதுகளைப் பெற்ற அவருடன் எழுபதுகளின் தொடக்கத்தில் ஒரே வீட்டில் வசித்த போது இருவரும் சேர்ந்து மொட்டை அடித்ததையும் சொல்லி சந்தோஷப்பட்டார்.

இலக்கிய நண்பர்களின் சம்மதத்துடன் - திலீப் குமாரின் 'நிகழ மறுத்த அற்புதம்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்ற குறும்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு திலீப் குமார் தனது உரையாடலைத் துவக்கினார்.

) 0 (

பொதுவாகவே எனக்குக் கூச்சம் அதிகம். பிரபஞ்சன், எஸ்.ரா-வைப் போல எனக்குப் பேசவராது. கூட்டத்துக்குப் போறேன்னு என்னோட மனைவியிடன் சொன்ன போது "இன்னுமாயா இந்த ஊரு உன்ன நம்புது?" -ன்னு வடிவேல் மாதிரி சொன்னாங்க. அதனால கொஞ்சம் சமாளிச்சுக்கோங்க.

என்னுடைய ஆரம்ப கால பள்ளி வாழ்க்கை முரணானது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் பள்ளியிலும், எட்டாவது வரை குஜராத்தி மொழிப் பள்ளியிலும் கல்வி பயின்றேன். எதிர்பாராத விதமாக என்னுடைய பதின் பருவத்தில் தந்தையை இழக்க நேர்ந்ததால், குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தேன். குடும்ப கஷ்டத்தைக் கலைவதர்க்காக ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 35-/ ரூபாய் சம்பளம். லாட்டரி சீட்டு, டீத் தூள், கேஸ் பர்னர் போன்ற பல பொருட்களையும் விற்றிருக்கிறேன். Dry Clean Shop-ல் Bill போடும் வேலையையும், டெலிவரி செய்யும் வேலையையும் செய்திருக்கிறேன். வேலை கடினமாக இருக்கும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் கையில் கிடைக்கும் அனைத்தையும் படிப்பேன்.

மாறிமாறிப் படித்ததால் தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. ஆங்கிலத்தையும் அதுபோலவே கற்றுக் கொண்டேன்.

ஒரு முறை குஜராத்தி பள்ளியில் படிக்கும் போது ஆண்டு மலருக்காக ஒரு சிறுகதை எழுதினேன். சிறப்பு என்னவெனில் தமிழ் மொழியில் எழுதினேன். எங்களுடைய தமிழ் வாத்தியார் ஒரு மாதிரி... 'சாக்ரடீஸ்' என்ற வார்த்தையை 'சாக்ரடீசு' என்றும், 'விஷம்' என்ற வார்த்தையை 'விடம்' என்றும்தான் சொல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார். மறதியில் தவறாகக் கூறினாலும் அடித்துவிடுவார். அவரிடம் என்னுடைய சிறுகதையை எழுதிக் கொடுத்துவிட்டேன்.

கதை வித்யாசமாக இருக்க வேண்டுமென்று 1962-ல் நடந்த போரினை மையமாக வைத்து எழுதினேன். 'மங்களா' - கதையின் நாயகி.
கதையின் தலைப்பு 'அசம்பாவிதம்'. போரினால் விதவையாகிறாள். தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையையும் நாட்டுக்கு அற்பணிக்கும் திலகமாக அவளைக் கற்பனை செய்து எழுதினேன். இந்த பாத்திரத்திற்கு கண்ணம்மா தான் எனக்கு Inspiration. படம் ஆரம்பித்து முடியும் அரை அழுது கொண்டிருப்பார்களே அவர்களே தான்.

அதன் பிறகு நீண்ட காலம் எழுதுவதைப் பற்றி நினைத்ததில்லை. ஜவுளிக் கடையில் வேலை செய்தபோது தினம்தோறும் டீ குடிப்பதற்கு காலணா கொடுப்பார்கள். அப்படி டீ-குடிக்கச் சென்ற போது ஒரு முறை 'ஞான ரதம்' இலக்கியப் பத்திரிகையை பார்க்க நேர்ந்தது. ஜெய காந்தன் ஆசிரியராக இருந்து வெளிவந்த பத்திரிகை. இரண்டு நாள் டீ-காசை மிச்சப்படுத்தி அந்தப் பத்திரிகையை வாங்கினேன். அந்த சூழ்நிலையில் எனக்கு அது ஒரு பெரிய தொகை. இருந்தாலும் எனக்குள் இருந்த இலக்கிய ஆர்வம் பற்றிக் கொண்டது.

உடனே என்னுடைய நான்கு கவிதைகளை 'ஞான ரத்தத்திற்கு' அனுப்பினேன். ஜெயகாந்தன் எதிரில் இருப்பவர்களை ஆச்சர்யப் படுத்துபவர். நாம் ஒன்று நினைத்து "இதை ஏன் எழுதினீர்கள்?" என்று கேட்டால்... "நீ ஏன் படிக்கிறாய்?" என்று திருப்பிக் கேட்பார்..." அவரிடமிருந்து நான் அனுப்பிய கவிதைக்கான ஒரு கடிதம் வந்தது. "நீங்கள் ஷெல்லியைப் படித்ததுண்டா?" என்று. இல்லை என்று ஒரு பதில் கடிதம் எழுதினேன்.

கவிதை நன்றாக இருக்கிறது என்று அவர்களும் பதில் கடிதம் போட்டார்கள். நீண்ட நாட்கள் பிரசுரம் ஆகாததால் விசாரித்து மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன். கவிதை தொலைந்துவிட்டது என்றார்கள். மேலும் சிறுகதை எழுதி அனுப்புமாறு கேட்டார்கள். நானும் ஒன்னரை பக்க கதையை பெரிய பெரிய எழுத்துகளில் 6-பக்கங்கள் வருவது போல எழுதி அனுப்பினேன். அதிர்ஷ்ட வசமாக அந்தக் கதை பிரசுரம் ஆனது.

நீண்ட நாள் கழித்து 'ஞான ரதம்' என்னை வசீகரித்ததைப் பற்றி ஜெய காந்தனை நேரில் சந்தித்த போது தெரியப்படுத்தினேன். "அந்த காசிற்கு நீ நல்ல சினிமா பார்த்திருக்கலாமே!" என்றார். அவர் எப்பவுமே அப்படித்தான். பகட்டான தோரணையான மனிதர். அவருக்கு இதெல்லாம் பிடிக்கும் ஆனால் பகிரங்கமாகத் தெரியப்படுத்த மாட்டார். என்னைப் பொறுத்தவரை ஜெயகாந்தன் மாதிரியான ஆட்கள் ஹால் டிக்கெட் மாதிரி. அது இருந்தால் தான் தேர்வு எழுத முடியும். எது எப்படி இருந்தாலும் தேர்வுதானே முக்கியம்.

அதன் பிறகு எனக்கு tuberculosis (TB) வந்து கொடுமையான வலியை அனுபவித்தேன். ஒருநாள் திடீரென ரத்த வாந்தி எடுத்தேன். இரவு 2 மணிக்கு நடந்தே 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். அவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் 60 ரூபாய் ஆகும் என்றார்கள். அந்தக் காலத்தில் TB தீவிர வியாதி என்பதால் சீக்கிரமே இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன். இரண்டு மாத காலம் வீட்டிலிருந்து ஒய்வு எடுக்கச்சொன்னார்கள். தயவு செய்து இதையெல்லாம் சுய இரக்கத்திற்காக சொல்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். நான் கடந்து வந்த பாதையை உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.

ஒய்வு நேரத்தில் சும்மா இல்லாமல் "தீர்வு" என்ற கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த அண்ணன் கோவத்துடன் கதையைப் பிடுங்கி எங்கள் வீட்டின் பக்கத்திலுள்ள குழியில் போட்டுவிட்டார். அந்தக் குழி எங்கள் பகுதியிலுள்ள பெண்கள் மலம் கழிக்கும் இடம். இது நடந்தது மாலை 6 மணிக்கு என்பதால் அங்கு சென்று எடுத்துவரவும் முடியவில்லை. ஆகவே அதன் மீது யாரும் மலம் கழித்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பாருங்கள் கடவுளை எதற்கெல்லாம் கூப்பிடவேண்டியிருக்கிறது. நல்ல வேலை யாரும் அசம்பாவிதம் செய்யவில்லை. விடிந்தவுடன் அந்தத் தாள்களை எடுத்து கதையை வேறு பிரதியெடுத்து கணையாழிக்கு அனுப்பிவைத்தேன். கணையாழியில் அது பிரசுரம் காண ஒரு வருட காலத்திற்கும் மேலானது.

ஒரு முறை நான் சென்னையிலிருந்த போது கணையாழி கஸ்தூரிரங்கனை சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது "தீர்வு" கதையை ஞாபகப் படுத்தினேன். அது நல்ல கதையாச்சே அப்பவே
போட சொல்லிட்டேனே! என்று அருகிலிருந்தவரிடம் கூறினார். அவர் தேடித் பார்த்து விட்டு கடைசி நாலு பக்கங்கள் தொலைந்துவிட்டது என்றார். அதன் பிறகு உட்கார்ந்து மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இன்று வரை அந்தக் கதை என்னை அடையாளப்படுத்துகிறது. "தீர்வு" வெளியான பிறகு நிரந்தரமாக சென்னைக்கு வந்துவிட்டேன். அப்பொழுதுதான் ஞானியுடன் ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்தது என்று சிநேகத்துடன் அவரைப்பார்த்தார்.

சிரமங்களுக்கிடையிலும் க்ரியா ராமகிருஷ்ணனுடன் 15 வருடங்கள் இருந்ததன் மூலம் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். நானும் நேரம் கிடைக்கும் போது எழுதத் துவங்கினேன். பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள என்னால் முடிந்தது. மொழி, அறிவு சார்ந்த போதாமையையும் மீறி நான் எழுதுவதற்கு நான் சந்தித்த மனிதர்களே காரணம்.

) 0 (

வறுமை காரணமாக சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றதால் அடித்தட்டு மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் ஜவுளிக் கடையில் வேலை செய்த போது ஒரு விபச்சார விடுதியின் ஸ்தாபகர் எங்கள் கடைக்கு வருவார். அங்கிருக்கும் பெண்களை வெளியில் அனுப்பமாட்டார்கள். ஆகவே யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென்று கேட்டு ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டு வருவார். அதைப் பார்த்தாலே அங்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். 32 Size Bra நாலு செட், 36 Size Bra மூணு செட் என்று அவர்களுக்குத் தேவையானது எல்லாமே இருக்கும். என்னுடைய கடையில் நான்தான் சிறியவன் என்பதால் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு அவர்களிடம் கொடுக்கச் செல்வேன்.

அங்கு குயின் என்றொரு பெண் இருந்தாள். அந்தக் காலத்துலேயே நல்லா படிச்சவங்க. இங்க்லீஷ் எல்லாம் நல்லா பேசுவாங்க.அதனால எல்லாருக்கும் அவங்க மேல ஒரு மோகம். சில பேருக்கு வாழ்க்கையின் பெரிய லட்சியமே காசு சேர்த்து வச்சி அவங்களை அடையறதுதான். எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. அவங்கள பத்திக் கூட ஒரு கதை எழுத யோசிச்சிக்குனு இருக்கேன்.

இதே மாதிரி ஒரு முறை என்னோட நண்பனை சினிமா பார்க்க கூப்பிட்டு இருந்தேன். அவனுடைய அம்மா விதவை. வேலையிலிருந்து சீக்கிரமே புறப்பட்டு வீட்டிற்கு சென்று சாப்பிட்டுட்டு வந்துவிட்டேன். அவனோட வீட்டிற்கு அருகில் சென்ற போது வெளியே நின்று கொண்டிருந்தான். "நீ இன்னும் கிளம்பலயாடா?" என்று கேட்டேன். "கொஞ்சம் பொருடா" என்று சொன்னான். நீண்ட நேரம் கழித்து ஒரு ஆள் அவனுடைய வீட்டிலிருந்து வெளியே வரவும் இவன் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான்.

சினிமா பார்த்துவிட்டு திரும்பும் போது அதைப் பற்றி விசாரித்தேன். "எங்க அம்மா எனக்காக ரொம்ப கஷ்டப் படுறாங்கடா. அவங்களுக்கு அது சந்தோஷமா இருக்கும் போல... அதான் அப்படியே விட்டுட்டேன்..." என்று சொன்னான்.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகளாலும், 4 தலைமுறைகளுக்கு முன்பே தமிழகத்திற்கு வந்ததினாலும் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட எண்ணங்கள் இவற்றால் என்னுடைய தனித்துவத்தை அடையாளப்படுத்தப் போராடினேன். அந்த தனித்துவம் எனக்கு இலக்கியமாக அமைந்தது. மேற்சொன்ன மனிதர்களின் பரிச்சயம் அதற்கான
களமாக அமைந்தது.

பெரிய பத்திரிகையின் தீபாவளி இதழுக்காக என்னிடம் ஒரு காதல் கதையைக் கேட்டிருந்தார்கள். எனக்கு காதல் கதையெல்லாம் வராது என்று சொல்லிவிட்டேன். "என்ன சார்... நீங்க பெரிய எழுத்தாளர் எதாச்சும் ஒன்னு எழுதிக் கொடுங்களேன். உங்களைப் போல எழுத்தாளர்கள் எல்லாம் எழுதறாங்க நீங்க மட்டும் ஏன் நிராகரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

"நீங்கள் எத்தனை சிறுகதைகளை ஒதுக்குகிறீர்கள். அதன் மூலம் எத்தனை நூறு பேரை நிராகரிக்கிறீர்கள். நீங்கள் நிராகரிப்பதை அவர்கள் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நூறு எழுத்தாளர்களில் ஒருவன் உங்களுடைய ஒரேஒரு பத்திரிகையை நிராகரிப்பதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு கோவப்படுகிறீர்கள்" என்று கூறினேன்.

ஜெயகாந்தன் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அவருடைய படைப்புகளில் கொண்டுவந்தது போல, என்னை பாதித்த விஷயங்களை எழுதத்தான் நானும் பிரியப்படுவேன். பல மனிதர்களை ஏற்றுக் கொள்வதாலும், அவர்களுடைய உணர்விற்கு மதிப்பளிப்பதாலும், நகைச்சுவை உணர்வு இருப்பதாலும் வாழ்க்கையின் யதார்த்த நிலைகளைக் கொண்டே என்னுடைய இலக்கிய முயற்சிகளை மேற்கொள்ள விழைகிறேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை என்று கூறியதோடு நீண்ட நேரம் பேசி அருத்துவிட்டதாகத் தெரிகிறது என்பது போல் பார்த்தார்.

எஸ். ராவின் புத்தக வெளியீட்டிற்கு நேரம் ஆனதால் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். ஒரு சிலர் சத்தமில்லாமல் கடைசி வரிசையிலிருந்து நழுவினார். ஞானி மட்டும் கூலாக இருந்தார். அவர் பேச்சின் மீதான உரையாடலையும் தொடங்கி வைத்தார். யாருமே கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தனர். அடியேன் முதல் கேள்வியைக் கேட்டு துவக்கி வைத்தேன். அதன் பிறகு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதில் கூறினார். ஆரம்பம் முதலே அவருடைய பேச்சில் ஆங்காங்கு நகைச்சுவை வெளிப்பட்டது. கேள்வி நேரத்தின் போது அதிகமான நகைச்சுவை வெளிப்பட்டது.

நல்ல எழுத்தாளர் என்பதையும் மீறி நல்ல மனிதரைச் சந்தித்த திருப்தியுடன் கேணியிலிருந்து திரும்பினேன்.

திலீப் குமாரின் இரண்டு சிறுகதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.
1. கண்ணாடி
2. அக்ரகாரத்தில் பூனை


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்
தில் இருப்பதை எழுதி இருக்கிறேன்.
2. நண்பர் 'ரவி பிரகாஷ்' வராததால் பதிவு நீண்டு விட்டது.
3.
அவர் பேசியது அனைத்துமே நகைச்சுவையாக இருந்தது. படிக்கும் போது சீரியசாகத் தெரிந்தால் அதற்கு நானே பொறுப்பு. கிட்டத்தட்ட மூன்று மணிநேரப் பேச்சின் சிறு வடிவம். ஆகவே பல விஷயங்கள் விடுபட்டிருக்கலாம்.

5 comments:

  1. பகிர்வுக்கு நன்றி தல!

    சிறுகதைக்கு எக்ஸ்ட்ரா நன்றி!

    ReplyDelete
  2. கிருஷ்ணா, மேலதிகத் தகவலுக்கு நன்றி.
    //நீங்கள் எத்தனை சிறுகதைகளை ஒதுக்குகிறீர்கள். அதன் மூலம் எத்தனை நூறு பேரை நிராகரிக்கிறீர்கள். நீங்கள் நிராகரிப்பதை அவர்கள் எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நூறு எழுத்தாளர்களில் ஒருவன் உங்களுடைய ஒரேஒரு பத்திரிகையை நிராகரிப்பதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு கோவப்படுகிறீர்கள்" என்று கூறினேன்.//

    தெளிவு.

    ReplyDelete
  3. நன்றி கிருஷ்ணா. :)

    அவரோட அந்த நண்பர். அவங்க விதவை அம்மா. அதிர்ச்சியாக இருந்தது. :(

    ReplyDelete
  4. பின்னூட்டத்திற்கு நன்றி...

    ReplyDelete